சிவன், பெருமாள் கோயில்களில் டிச.16ல் மார்கழி மகா உற்சவம் ஆரம்பம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2024 05:12
பரமக்குடி; பரமக்குடியில் சிவன் மற்றும் பெருமாள் உட்பட அனைத்து கோயில்களிலும் டிச.16 முதல் மார்கழி மகா உற்சவம் துவங்குகிறது.
மாதங்களிலேயே சிறந்தது மார்கழி என்பார்கள். அந்த வகையில் மார்கழி மாதம் முழுவதும் கடவுளை வழிபடும் மாதமாக உள்ளதால் தேவர்களின் மாதமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு டிச.16ல் மார்கழி 1 துவங்குகிறது. அப்போது பெருமாள் கோயில்களில் ஆண்டாள் அருளிய திருப்பாவை, சிவன் கோயில்களில் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடப்படும். தொடர்ந்து அனைத்து கோயில்களிலும் திருப்பள்ளி எழுச்சி உட்பட பல்லாண்டு பாடி காலை 4:00 மணி தொடங்கி 6:00 மணிக்குள் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்படும். இதனை ஒட்டி பக்தர்கள் திரளாக காலையில் எழுந்து தரிசனம் செய்வதுடன், பாகவதர்கள் பஜனை பாடல்கள் பாடியபடி வலம் வருவர். மேலும் அனைத்து ஜீவராசிகளுக்கும் சிவபெருமான் படி அருளிய அஷ்டமி சப்பரம் டிச.23, அனுமன் ஜெயந்தி டிச.30ல் கொண்டாடப்பட உள்ளது. பரமபத வாசல் திறப்பு அனைத்து பெருமாள் கோயில்களிலும் 2025 ஜன.10 அன்று வைகுண்ட ஏகாதசி விழாவாக கொண்டாடப்படும். ஜன.11 துவாதசி விழாவும், ஆண்டாள், பெருமாள் சேர்க்கையாகிய கூடாரவல்லி உற்சவம் நடக்க உள்ளது. தொடர்ந்து ஜன.13 அதிகாலை நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் மார்கழி உற்சவத்தின் நிறைவு நாளாகும்.