பதிவு செய்த நாள்
26
ஏப்
2026
09:04
திருப்பூர்: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் ஆராதனா தினத்தை முன்னிட்டு, திருப்பூர் ஸ்ரீ சத்யசாய் சேவா மையம் ஆன்மிகக் கடலில் மூழ்கியது.
பி.என். ரோடு, ராம் நகரில் உள்ள சாய் மந்திரில், பக்தி மணமும் சேவைக் குணமும் ஒன்றிணைந்த ஒரு தெய்வீகத் திருவிழாவாகவே இது அரங்கேறியது.
நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் ஓம்கார நாதமும், சுப்ரபாதமும் ஒலிக்க, ‘நகர சங்கீர்த்தனம்’ நடந்தது.
பாபாவின் திருநாமத்தைச் சொல்லிக்கொண்டு பக்தர்கள் வீதிகளில் வலம் வந்த காட்சி, திருப்பூரை ஒரு சிறு பிரசாந்தி நிலைய மாகவே மாற்றியது. கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டு, பிரசாந்தி கொடி ஏற்றப்பட்டது.
‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்ற பாபாவின் பொன்மொழிக்கேற்ப, இரவு முதலே பக்தர்கள் நாராயண சேவைக்கான (அன்னதானம்) பணிகளில் ஈடுபட்டனர்.
காலை 11:30 மணிக்குத் தொடங்கிய நாராயண சேவையில் 1,100 பக்தர்கள் கலந்துகொண்டு பிரசாதத்தை மகிழ்வுடன் பெற்றுக்கொண்டனர்.
மாலை 5:30 மணிக்கு வேத பாராயணமும், உள்ளத்தை உருக்கும் சிறப்பு பஜனையும் நடைபெற்றன. தேசிய தலைமை தத்துவத் திட்டத்தின் மாணவரும், முன்னாள் பால விகாஸ் மாணவருமான காளி விக்னேஷ் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவு, பக்தர்களுக்குப் பாபாவின் போதனைகளை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தியது. இறுதியாக, மகா மங்கள ஆரத்தியுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
ஆராதனா தினச் சிறப்போடு மட்டுமல்லாமல், ஆண்டுதோறும் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்க, சித்திரை மாதம் முழுவதும் ‘நீர்மோர்’ வழங்கும் சேவையையும் சத்யசாய் சேவா மையத்தினர் அர்ப்பணிப்புடன் செய்து வருகின்றனர்.