குறிப்பாக வார விடுமுறை ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்வர். அந்த வகையில் நேற்று, ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்திற்கு மாறாக, காலை 6:00 மணி முதலே அதிகளவில் பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். குறிப்பாக, ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் முருகன் மலைக்கோவிலுக்கு வந்ததால், தேர்வீதியில் எங்கு பார்த்தாலும், செவ்வாடை பக்தர்கள் அதிகளவில் இருந்தனர். இதனால் பொது தரிசனத்தில் பக்தர்கள், நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதே போல, 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். முன்னதாக, அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு தங்கத்தேரில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தேர்வீதியில் ஒருமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து ஏற்படுவதால், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கோவில் பேருந்து தவிர மீதமுள்ள அனைத்து வாகனங்களுக்கும் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தன. இதனால், பெரும்பாலான பக்தர்கள் மலைப்பாதையில் நடந்து சென்றும், சில பக்தர்கள் ஆட்டோக்கள் வாயிலாகவும் சென்றனர்.