மணவாள நகர்; கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சி, மணவாள நகர் பகுதியில் அமைந்துள்ள மங்கள ஈஸ்வரி அம்பிகா சமேத மங்கள ஈஸ்வரர் கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக இன்று நடந்தது. முன்னதாக, கடந்த 3ம் தேதி, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கின. அதை தொடர்ந்து 7ம் தேதி, கும்ப அலங்காரம், கும்ப பூஜை, முதல்கால பூஜை நடந்தது. மஹா கும்பாபிஷேக விழாவையொட்டி, இன்று அதிகாலை 4:30 மணிக்கு மஹா பூர்ணாஹூதியும், 5:00 மணிக்கு கலச புறப்பாடும், காலை 5:15 மணிக்கு விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, காலை 5:30 மணிக்கு, மங்கள ஈஸ்வரர் மற்றும் மங்கள ஈஸ்வரி அம்பாள் மற்றும் கிராம தேவதைகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் மணவாள நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளானவர்கள் பங்கேற்றனர். இன்று முதல், தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெறும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.