பதிவு செய்த நாள்
12
பிப்
2025
10:02
வீரபாண்டி; காளிப்பட்டி கந்தசாமி கோவில் தைப்பூச திருவிழா தேரோட்டம், ஏராளமான பக்தர்களின், ‘அரோகரா’ கோஷம் அதிர, கோலாகலமாக நடந்தது.
சேலம் – நாமக்கல் மாவட்ட எல்லையான காளிப்பட்டி கந்தசாமி கோவில் தைப்பூச திருவிழா, கடந்த, 7ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு, வள்ளி தெய்வானையுடன் கந்தசாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு, காலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபி ேஷகம் செய்து, 6:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. மதியம், 3:00 மணிக்கு, இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் பரஞ்ஜோதி, உதவி கமிஷனர் சுவாமிநாதன், செயல் அலுவலர் கிருஷ்ணன், பரம்பரை அறங்காவலர் சரஸ்வதி முன்னிலையில், முதலில் விநாயகர் தேரை, திரளான பக்தர்கள் இழுத்து கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத கந்தசாமியை சர்வ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளச்செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜை செய்து தேரோட்டம் தொடங்கியது. கோவில் முன் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், ‘அரோகரா’ கோஷம் அதிர, வடம்பிடித்து தேரை இழுத்து, கோவிலை வலம் வந்தனர். அப்போது திரண்டிருந்த பக்தர்கள், அவர்கள் வயல்களில் விளைந்த தானியங்கள், உப்பு, மிளகு ஆகியவற்றை தேர் மீது வீசி, காணிக்கையாக செலுத்தினர். பலர், பாத யாத்திரையாக வந்து பங்கேற்றதோடு பால், பன்னீர், இளநீர், புஷ்ப காவடிகளை எடுத்து வந்து, காணிக்கையாக செலுத்தினர். அவர்களுக்கு ஆட்டையாம்பட்டி முதல் காளிப்பட்டி வரை வழி நெடுக, தண்ணீர் பந்தல்கள், அன்னதான பந்தல்கள் அமைக்கப்பட்டு, நீர்மோர், உணவு வழங்கப்பட்டன. இதையொட்டி, சேலம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நாளை இரவு சத்தாபரணம், நாளை மறுநாள் வசந்த உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறும்.