பதிவு செய்த நாள்
15
பிப்
2025
09:02
மதுரை; ‛விட்டுக்கொடுக்கும் பண்பால் மகிழ்ச்சி பெறலாம். ஆணவம் கூடாது என மதுரையில் மாதா அமிர்தானந்தமயி பேசினார். மதுரை பசுமலையில் உள்ள பிரம்மஸ்தான ஆலயத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு மாதா அமிர்தானந்தமயி வந்துள்ளார். இரண்டு நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் நிறைவு நாளான நேற்று பக்தர்களிடம் பேசியதாவது: வாழ்க்கையை கடல், கவிதை, கனவு, நீண்ட துாரம் பயணம் போன்ற பல்வேறு பொருட்களை கொண்டு ஒப்பிடுகின்றனர். ஆனால் பொறுமை, தியாகம், பணிவு, திறந்த மனப்பான்மை, எதையும் ஏற்றுக்கொள்ளும் மனம், இதுவே முதன்மையானது. வாழ்க்கை நம் சிற்றறிவிற்கு அப்பாற்பட்ட மர்மம். அது எல்லையற்றது என்று முனிவர்கள் போற்றினர். பணிவை வளர்க்க வேண்டும். மற்றவருடைய பொருளை பலவந்தமாக கைப்பற்ற வேண்டும் என நினைத்தல் கூடாது.
ஆற்றில் நீர் குடிக்க குனிகிறோம். அதுபோல இந்த பிரபஞ்சத்தில் வாழ பணிவு அவசியம். இதற்கு தடையாக இருப்பது ஆணவம். ஆணவத்தால் மற்றவரை விட நமக்கு தான் இழப்பு. இந்த உலகில் மனிதன் தவிர அனைத்து உயிர்களும் அதன் விதிமுறைப்படியே வாழ்கிறது. மனிதன் இயற்கை விதிமுறையை பின்பற்றி வாழ வேண்டும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருந்தால் மகிழ்ச்சி நிலைக்கும். குழந்தைகளுக்கு அலைபேசியை கொடுத்து வளர்ப்பது தவறு. இதனால் இளமையிலே கண் மங்கிவிடும், மன அழுத்தம் ஏற்படும். குழந்தைகள் புராணக் கதைகள் கேட்பது, கடவுள் சித்திரங்கள் வரைவது போன்றவற்றால் மனநலம், வலிமை ஏற்படும். அன்பிலே பிறந்து, வளர்ந்து, வாழ்வது மனிதனின் உண்மையான இயல்பு. இதை மாற்றவோ, அழிக்கவோ முடியாது. இவ்வாறு பேசினார். பஜனை, சத்சங்கம், தியானம் நடந்தன. மதுரை மகாத்மா கல்வி நிறுவனங்களின் தலைவர் பிரேமலதா, நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் மாரிமுத்து ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா மலரை சுவாமி பரமானந்தா வெளியிட முன்னாள் அமைச்சர் உதயகுமார் பெற்றுக்கொண்டார்.