பதிவு செய்த நாள்
17
பிப்
2025
10:02
குன்றத்துார்; குன்றத்துார் முருகன் கோவில் மலை அடிவாரத்தில், பழமையான கந்தழீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலை, ஆகம விதிப்படி புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த கோவில் அறங்காவலர் குழுவினர் முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து, உபயதாரர்கள் நிதியில், 2.04 கோடி நிதியில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதில், 1.51 கோடி ரூபாய் மதிப்பில், புதிய ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டும் பணிகளும், 11.65 லட்சம் ரூபாய் மதிப்பில், சன்னிதிகள் மறுசீரமைக்கும் பணிகளும், 41.60 லட்சம் ரூபாய் மதிப்பில், பிரகாரத்தில் உள்ள சிமென்ட் கற்களை அகற்றி, கருங்கல் பதிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
இதுகுறித்து, கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது: ராஜகோபுரம் கட்டுமான பணிகள், 60 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில், கடந்த 10ம் தேதி பாலாலயம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மூன்று மாதங்களில் அனைத்துபணிகளையும் முடித்து, மஹா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.