பதிவு செய்த நாள்
26
பிப்
2025
10:02
நம் பாரத ஆன்மிக மரபில், மாசி மாதம் வரும் சிவராத்திரி, மஹா சிவராத்திரி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழா சர்வதேச அளவில் புகழ்பெற்ற விழாவாக,உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நேரிலும், கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் மூலமும் கலந்து பெரு விழாவாக திகழ்கிறது.
எதற்காக மஹாசிவராத்திரி விழா?; மஹா சிவராத்திரி குறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியுள்ளதாவது: நிலவின் சுழற்சிக் கணக்கில் ஒவ்வொரு மாதத்தின் 14வது நாள் (அ) அமாவாசைக்கு முந்தைய நாள் சிவராத்திரி என்று வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டில் வரும் 12 சிவராத்திரிகளில் மாசி மாதத்தில் (பிப்ரவரி-மார்ச் மாதத்தில்) வரும் சிவராத்திரியை மஹாசிவராத்திரி என்பர். இந்த இரவு ஆன்மிக சாத்தியங்கள் நிறைந்த இரவு. அன்றிரவு பூமியின் வடக்கு அரைகோளம் ஏற்கும் நிலை, இயற்கையாகவே உங்கள் உயிர் சக்தியை மேல் நோக்கி எழும்பச் செய்கிறது. அதாவது இந்நாளில் ஒருவர் தன் ஆன்மிக சாத்தியத்தின் உச்சி நோக்கி செல்வதற்கு இயற்கை தானாகவே உந்துகிறது. இதை பயன்படுத்திக் கொள்வதற்காகத்தான் இந்தக் கலாசாரத்தில், மஹாசிவராத்திரியை இரவு முழுவதும் நீடிக்கும் விழாவாக உருவாக்கினார்கள். இயற்கையாக மேலெழும்பும் சக்தி தடையின்றி மேல் நோக்கி செல்வதற்கு உதவும் விதமாக, அன்றிரவு முழுவதும் கண்விழிப்பது மட்டுமின்றி, முதுகுத்தண்டை செங்குத்தான நிலையில் நேராக வைத்திருப்பது அவசியம் என்றும் வலியுறுத்தினார்கள்.
மஹாசிவராத்திரியின் முக்கியத்துவம்; ஆன்மிகப் பாதையில் உள்ளவர்களுக்கு மஹாசிவராத்திரி மிகமிக முக்கியமான நாள். குடும்ப வாழ்வில் இருப்பவர்களுக்கும், உலகில் சாதிக்க விரும்புபவர்களுக்கும் கூட இது முக்கியமான நாள். குடும்ப வாழ்வில் உள்ளவர்கள் மஹாசிவராத்திரியை சிவனின் திருமண நாள் என்றும், உலகில் சாதிக்க நினைப்பவர்கள் இந்நாளை, சிவன் தன் எதிரிகளை எல்லாம் வென்ற நாள் எனவும் கொண்டாடுகிறார்கள். ஆனால் துறவிகளுக்கோ இந்நாள், சிவன் கைலாய மலையுடன் ஒன்றிக்கலந்த நாள். அன்று அவர் அசைவற்று ஒரு மலைபோல் மாறினார். யோகக் கலாச்சாரம் சிவனை கடவுளாகப் பார்ப்பதில்லை. அவரை ஆதி குருவாக (அ) யோக விஞ்ஞானத்தை தோற்றுவித்த முழுமுதற் குருவாக அவரை வணங்குகின்றனர். பல ஆயிரக்கணக்கான வருடங்கள் தியானத்திலிருந்த சிவன் ஒருநாள் அசைவற்றவரானார். அந்த நாள்தான் மஹாசிவராத்திரி. துளிகூட அசைவின்றி முழுமையாய் அசைவற்றவராக அவர் ஆன நாள் என்பதால், ஞானிகள் சிவராத்திரியை அசைவற்ற தன்மை நிறைந்த நாளாகப் பார்க்கின்றனர்.
மஹாசிவராத்திரியின் ஆன்மிக முக்கியத்துவம்; மரபு வழிக் கதைகளைத் தள்ளி வைத்து விட்டு, யோகக் கலாசாரத்தில் இந்த நாளும் இரவும் ஏன் இத்தனை முக்கியத்துவம் கொண்டிருக்கிறது என்று பார்த்தால், ஆன்மிகத் தேடுதல் உள்ளவர்களுக்கு இந்நாள் பல சாத்தியங்களை வழங்குகிறது. நவீன விஞ்ஞானம் பல நிலைகளைத் தாண்டி இன்று அடைந்திருக்கும் நிலையில் அவர்கள் ஊர்ஜிதம் செய்வது என்னவென்றால், உயிர் என நாம் அறிந்திருக்கும் அனைத்தும், பொருள்தன்மை, படைப்பு என்று நாம் உணர்ந்திருக்கும் அனைத்தும், பிரபஞ்சம் பால்மண்டலம் என்று நாம் அறிந்திருக்கும் அனைத்தும், இப்படி எல்லாமே ஒரே சக்தியின் பல்லாயிரக்கணக்கான வெளிப்பாடு என்பதுதான். விஞ்ஞானத்தின் அடிப்படையில் முன்வைக்கப்படும் இந்த உண்மையை, ஒவ்வொரு யோகியும் அனுபவரீதியாக உணர்ந்து அறிகிறார்கள். "யோகி" என்று சொன்னாலே இப்பிரபஞ்சமும் படைப்பும் அனைத்தும் ஒன்றென தன் அனுபவத்தில் உணர்ந்தவர் என்று பொருள். "யோகா" என்று சொல்லும்போது ஏதோவொரு குறிப்பிட்ட பயிற்சியையோ அமைப்பையோ நான் குறிப்பிடவில்லை. எல்லையில்லா தன்மையை உணர வேண்டும் என்ற அடிப்படையில் தோன்றும் அனைத்து ஏக்கங்களும், பிரபஞ்சத்தின் ஒருமைநிலையை அறிந்திடவேண்டும் என்று தோன்றும் அனைத்து ஏக்கங்களும் யோகாதான். ஒப்பற்ற அந்த ஒருமைநிலையை உணர்வதற்கு இந்த மஹாசிவராத்திரி இரவு வாய்ப்பளிக்கிறது.
மஹாசிவராத்திரி - விழிப்புணர்வு மேலோங்கும் நாள்; ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் படைப்பிற்கே மூலமான அந்தப் பரந்துவிரிந்த வெறுமையை நீங்கள் உணர்வதற்கான வாய்ப்பையும் சாத்தியத்தையும் மஹாசிவராத்திரி இரவு வழங்குகிறது. ஒருபுறம் பார்த்தால் சிவன் "அழிக்கும் சக்தி" எனப்படுகிறார். மறுபுறம் பார்த்தாலோ அவரை "கருணைக் கடல்" என்கின்றனர். அதுமட்டுமா? கொடுக்கும் குணம் கொண்ட வள்ளல்களுக்கெல்லாம் வள்ளல் என்றும் அவரைப் போற்றுகின்றனர். யோகக் கலாச்சாரத்தில் சிவனின் கருணையை எடுத்துரைக்கும் கதைகள் பற்பல உள்ளன. கருணைக் கடலாய் அவர் ஊற்றெடுத்த தருணங்களும் சூழ்நிலைகளும் மலைக்க வைக்கும் அதேநேரம் ஆச்சரியத்திலும் ஆழ்த்துகிறது. அதனால் மஹாசிவராத்திரி இரவு உள்வாங்குவதற்கும் சிறந்த இரவு. இந்த இரவில் "சிவன்" என்று நாம் குறிக்கும் அந்தப் பரந்துவிரிந்த வெறுமையை ஒரு நொடியேனும் நீங்கள் உணர்ந்துவிடவேண்டும் என்பது எங்கள் ஆசை, ஆசி. இந்த இரவு வெறும் கண்விழிக்கும் இரவாக இல்லாமல், நீங்கள் விழித்தெழும் இரவாக ஆகட்டும். இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.
ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரியின் சிறப்பு அம்சங்கள்;
பஞ்சபூத கிரியா; பஞ்சபூத கிரியா என்பது வருடத்தின் மிகவும் சக்திவாய்ந்த இரவாகிய மஹாசிவராத்திரியன்று நடைபெறும் ஆன்மிக செயல்முறை ஆகும். இதில் பூதசுத்தி அல்லது பஞ்சபூத சுத்திகரிப்பு என்ற சக்திவாய்ந்த யோக செயல்முறையின் மூலம், தீவிரமான சாதனா மூலமாக மட்டுமே ஒருவர் பெறக்கூடிய பலன்களை, அனைவரும் பெறுவதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பை சத்குரு வழங்குகிறார்.
லிங்க பைரவி மஹா யாத்திரை; ஈஷாவில் குடி கொண்டிருக்கும் பெண்மையின் முழு வடிவமான லிங்க பைரவின் அருளை வாரி வழங்கும் லிங்க பைரவி மஹா யாத்திரை நிகழ்ச்சி மஹாசிவராத்திரியில் நடைபெறும்.
சிறப்பு விருந்தினர்கள்; நாட்டின் உயர் பொறுப்புகளில் இருக்கும் ஆளுமை மிக்க மனிதர்கள் ஈஷா மஹாசிவராத்திரியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வருகின்றனர்.
2017 பிரதமர் மோடி
2019ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
2020ம் ஆண்டு அப்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
2023 ஜனாதிபதி திரௌபதி முர்மு
2024 துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
2025ம் ஆண்டு, இன்று நடக்கும் மஹா சிவராத்திரி விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார்.
நாட்டின மாடுகளுக்கு மேடையில் மரியாதை!; அழிந்து வரும் நாட்டின மாடுகளை பாதுகாக்கும் வகையில் ஈஷாவில் பிரம்மாண்ட மாட்டு மனை பாராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மஹாசிவராத்திரி அன்று மாடுகளை மேடையேற்றி அவைகளுக்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். நமக்கு உணவளிக்கும் விவசாயிகளை அங்கீகரித்து மரியாதை செலுத்தும் விதமாக விவசாய பெருங்குடி மக்களுக்கு இலவச தனி சிறப்பு இருக்கைகள் வழங்கப்படுகின்றன.
சத்குரு வழங்கும் தியானங்கள்!; மஹா சிவராத்திரி இரவில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்தியா கால நேரங்களில் சத்குரு சக்திமிக்க தியானங்களை வழிநடத்துவார். இது மஹாசிவராத்திரியின் ஆன்மிக சாத்தியத்தை நமக்குள் இன்னும் ஆழமாக உணரும் வாய்ப்பினை வழங்குகிறது.
கலைகளின் சங்கமம்!; ஈஷா மஹா சிவராத்திரியில் இரவு முழுவதும் மக்களை விழிப்பாக வைத்து கொள்ள உதவும் வகையில் கண் கவர் கலை நிகழ்சிகள் நடைபெறுகின்றன. இதில் இந்தியாவின் தலைசிறந்த கலைஞர்கள் பங்கு பெறுகின்றனர். உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பார்க்கபடும் ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் இந்தியாவின் பல நாட்டுபுற கலைகள் மேடை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
திருவைந்தெழுத்து மஹாமந்திர தீட்சை!; ஈஷா மஹாசிவராத்திரியில் ஒவ்வொரு ஆண்டும் மாலை, 6:00 மணிக்கு துவங்கி, மறுநாள் காலை, 6:00 மணிக்கு நிறைவு பெறும். இதில், ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், பிரபலங்களின் இசை நிகழ்ச்சிகள், சிறப்பு பங்கேற்பாளர்கள் நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத்தொடர்ந்து, சத்குரு வழங்கும் தியானங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதிலும் குறிப்பாக நள்ளிரவு சந்தியா காலத்தில் சத்குருவால் வழங்கப்படும் மஹா மந்திர தீட்சை மிகவும் அற்புதமான ஆன்மிக வாய்ப்பினை மக்களுக்கு வழங்குகிறது.
யோகக் கலாச்சாரத்தில் மஹாமந்திரமாக கருதப்படும் திருவைந்தெழுத்து மந்திரம் குறித்து சத்குரு கூறுகையில் "இது அழிக்கும் கடவுளான சிவனின் மந்திரம். அவர் உங்களை அழிப்பதில்லை, மாறாக வாழ்க்கையின் உயர்ந்த சாத்தியங்களுக்கும் உங்களுக்கும் இடையே தடையாக இருப்பவற்றை அழிக்கிறார். உங்கள் உணர்வுநிலை மேம்பட்டு, வாழ்க்கையின் உயர்ந்த பரிமாணத்திற்கு உங்களைத் தயார்ப்படுத்த, கர்மாவின் சிக்கல்களை அகற்றும் வகையில் இந்த மந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது."எனக் கூறியுள்ளார். கோடிக்கணக்கான மக்கள் ஒரு நேரத்தில் ஒரே நேரத்தில் நமஷிவாய மந்திரத்தை உச்சாடனம் செய்வது மிகப்பெரிய ஆன்மிக அனுபவமாக மக்களுக்கு இருந்து வருகிறது.
"மிராக்கிள் ஆப் தி மைண்ட்" செயலி; மஹாசிவராத்திரி 2025 -இல் "மிராக்கிள் ஆப் தி மைண்ட்" எனும் இலவச செயலியை சத்குரு அறிமுகப்படுத்த உள்ளார். தினமும் 7 நிமிடங்கள் சத்குருவின் வழிக்காட்டுதலுடன் மக்கள் தியானம் செய்யும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் உலகில் உள்ள பல கோடி மக்களை தியானத்தில் ஈடுபட வைக்கும் பெருமுயற்சி முன்னெடுக்கப்படுகிறது. ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் "தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா"! தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில் "தமிழ்த் தெம்பு தமிழ் மண் திருவிழா" எனும் பிரம்மாண்ட விழா மஹா சிவராத்திரியை அடுத்து 11 நாட்கள் ஈஷாவில் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு பிப்., 27 முதல் மார்ச் 9 வரை இவ்விழா நடைபெறுகிறது. சத்குருவின் வழிகாட்டுதலின்படி, தமிழ் மொழியின் செழுமையையும், தமிழ் மண்ணின் கலாச்சாரம், வீரம், கலைகள், வரலாறு, உணவு முறைகள். வாழ்வியல் உள்ளிட்ட தமிழர் பண்பாட்டின் தொன்மையையும் கொண்டாடும் விதமாக தமிழ்த் தெம்பு தமிழ் மண் திருவிழா கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்று வருகிறது.
இத்திருவிழாவில் நம் தமிழ் பண்பாட்டை பிரதிபலிக்கும் கைவினை, கைத்தறி, உணவு, விவசாய மற்றும் விளையாட்டு பொருட்களின் அரங்குகள் இடம்பெறுகின்றன. இது தமிழ் மண் சார்ந்த தயாரிப்புகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் கை கொடுத்து ஆதரிக்கும் வண்ணம் நடைபெறுகிறது. இதனுடன் ஆண்டுதோறும் நாட்டின மாடுகள் மற்றும் குதிரைகளின் கண்காட்சியும் இத்திருவிழாவில் நடைபெறுகிறது. இதனுடன் தமிழகத்திலேயே முதன்முறையாக மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஆதியோகி முன்பு இந்தாண்டு மார்ச் 7 முதல் 9 ஆம் தேதி வரை நாட்டு மாடுகள் மற்றும் குதிரைகளின் சந்தையும் நடைபெற உள்ளது.
நம் தமிழ் பண்பாட்டில் நிகழ்த்து கலைகள் என்பன எளிய மக்களுடைய உணர்ச்சிகளின் வடிகாலாக, வாழ்வியல் வரலாற்று பதிவுகளாக, உடல் மன ஒத்திசைவின் உச்சமாக வளர்ந்து வந்துள்ளன. இன்றைய காலத்தில் இந்த கலைகள் அனைத்தும் அழியும் அபாயத்தில் உள்ளது. ஆகையால் இந்த கலைகளையும், கலைஞர்களையும் வளர்த்து ஊக்குவிக்கும் விதமாக 11 நாட்களும் மாலை நேரங்களில் தமிழ் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. குறிப்பாக இதில் பறையாட்டம், ஒயிலாட்டம், பொய்கால் குதிரையாட்டம், வள்ளி கும்மி உட்பட பல நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நம் தமிழ்நாட்டில் விளையும் பொருட்கள் முதல் தயாரிக்கப்படும் பொருட்கள் வரை பலவும் இந்த மண்ணுக்கே உரிய தனித்தன்மை கொண்டவைகளாகும். அந்த வகையில் தஞ்சாவூர் ஓவியம், வில்லியனூர் டெரகோட்டா, தோடா எம்பிராய்டரி, கள்ளக்குறிச்சி மரச்சிற்பம், மகாபலிபுரம் கற்சிலை, சுவாமிமலை ஐம்பொன் சிற்பங்கள் உள்ளிட்ட 20 புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையும் இத்திருவிழாவில் இடம்பெற உள்ளது. இந்த கண்காட்சியுடன் கூடுதலாக பார்வையாளர்களுக்கு இந்த கலைகளின் எளிமையான ஒருநாள் செய்முறை பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் மார்ச் 1-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழர் பண்பாடு குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிலம்பப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி, கோலப் போட்டி, பறையிசைப்போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டிகள் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக நடைபெற உள்ளன. இதில் பங்கேற்று வெற்றி பெறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கபட உள்ளன.
தமிழர்கள் போர்க்களங்களில் பயன்படுத்தும் உத்திகள் மட்டுமல்ல ஆடுகளத்தில் ஆடும் விளையாட்டுகளும் வீரம் செறிந்தது தான், அந்த வகையில் கொங்குநாட்டு வீர விளையாட்டான ரேக்ளா பந்தயம் மார்ச் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனுடன் பொது மக்களும், குழந்தைகளும் பங்கேற்று விளையாடி மகிழும் வகையில் கேளிக்கை விளையாட்டுகளும், மெகா இராட்டினங்களும் ஏற்பாடு செய்யப்படுகிறது. முதல் தமிழ் சங்கத்தின் தலைவர் என்று பலரால் போற்றப்படும் அந்த ஆதி குருவான ஆதியோகி சிவன் முன்பு, தமிழ் பண்பாட்டை கொண்டாடும் தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா எனும் பிரம்மாண்ட விழா நடைபெறுவது ஆகச் சிறந்த பொருத்தமாக அமைந்துள்ளது.