45 நாட்கள்.. 64 கோடிக்கும் அதிகமான பக்தர்கள்.. இன்று நிறைவடைகிறது மகா கும்பமேளா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2025 12:02
பிரயாக்ராஜ் : திரிவேணி சங்கமத்தில் ஜன.13ம் தேதி தொடங்கிய மஹா கும்பமேளா இன்று (பிப்.26) நிறைவு பெறுகிறது. இதுவரை 64 கோடிக்கும் அதிகமானோர் கும்பமேளாவில் கலந்து கொண்டு நீராடி இருக்கின்றனர். இன்று நிறைவு நாளையொட்டி முன் எப்போதும் இல்லாத வகையில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளின் சங்கமமான திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்கு பிரயாகராஜில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்கள் மீது ஹெலிகாப்டரில் மலர் தூவப்பட்டது. 45 நாட்கள் நீடித்த இந்த ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் உயிருள்ள வெளிப்பாடான மகா கும்பமேளா இன்றுடன் நிறைவடைகிறது. இன்று பிரயாகராஜின் ஒவ்வொரு அடியும் சிவ கோஷத்தால் நிரம்பியுள்ளது.
முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் இன்று மகா சிவராத்திரி விழாவையொட்டி பிரயாக்ராஜ் முழுவதும் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக மருத்துவர்கள், காவலர்கள், நிர்வாக அதிகாரிகள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி இயங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரயாக்ராஜ் பகுதியில் எந்த இடத்தில் மக்கள் வருகின்றனரோ, அதன் அருகிலேயே நீராட வேண்டும் என்று கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர்.