பதிவு செய்த நாள்
05
மார்
2025
04:03
திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உற்ஸவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் தங்கப்பல்லக்கில் திருவீதி உலா நடந்தது.
இக்கோயிலில் 11 நாட்கள் நடைபெறும் மாசி தெப்ப உத்ஸவம் பிரசித்தி பெற்றது. இதில் பெண்கள் வேண்டுதலுக்கு மகா லெட்சுமிக்கு தீப வழிபாடு செய்கின்றனர். உற்சவம் துவக்கத்தை முன்னிட்டு இன்று காலை 7:15 மணிக்கு உற்ஸவ பெருமாள், ஸ்ரீதேவி,பூதேவியருடன் கருங்கல் மண்டபத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினர். தொடர்ந்து சக்கரத்தாழ்வார்,கொடிபடம் திருவீதி உலா துவங்கியது. தேரோடும் வீதியில் பலிபீடங்களுக்கு பூஜைகள் நடந்து காலை 10:10 மணிக்கு கோயில் வந்தனர். தொடர்ந்து காலை 10:26 மணிக்கு பட்டாச்சார்யர்களால் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கும்,சுவாமிக்கும் பூஜைகள், அபிஷேகம் நடந்தது. கோயில் வளாகத்தில் வேண்டுதலுக்காக பெண்கள் தீபம் ஏற்றி பிரார்த்தித்தனர். மாலையில் நித்ய யாகசாலையில் பட்டாச்சார்யர்களால் நவகலச பூஜை நடைபெற்றது. பின்னர் பெருமாள், உபயநாச்சியார்,ஆச்சார்யர்க்கு காப்புக்கட்டி உற்ஸவம் துவங்கியது. நாளை முதல் தினசரி காலையில் சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெறும். மார்ச் 13 ல் வெண்ணெய்த்தாழி சேவையும், தெப்பம் முட்டுத் தள்ளுதலும் நடைபெறும். மார்ச் 14 காலை 12:16 மணி அளவில் பகல் தெப்பமும், இரவு 10:00 மணிக்கு தெப்பமும் நடைபெறும். மறுநாள் காலையில் தீர்த்தவாரி, இரவில் சுவாமி ஆஸ்தானம் சேருதலுடன் உற்ஸவம் நிறைவடையும். ஏற்பாட்டினை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானம் செய்கின்றனர்.