பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன்செந்தில் கோயிலில் நேற்று முன்தினம் சஷ்டி விழா நடந்த நிலையில் மார்ச் 10ல் மாசி மக விழா துவங்குகிறது. ஒவ்வொரு மாதத்திலும் சஷ்டி தினத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் தீபராதனைகள் நடக்கிறது. தொடர்ந்து 49ம் ஆண்டு திருச்செந்துார் சைக்கிள் யாத்திரை நடக்க உள்ளது. இதையடுத்து மார்ச் 10 மாலை 4:00 மணிக்கு சண்முகப் பெருமானுக்கு சண்முகார்ச்சனை, மார்ச் 11 மாலை 5:00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு நடக்கிறது. மார்ச் 12ல் வைகை ஆற்றில் இருந்து பால் குடங்கள் புறப்பட்டு அபிஷேகம், மாலையில் வீதி உலா நடக்க உள்ளது. மறுநாள் அன்னதானம், மார்ச் 14 காலை 9:00 மணி துவங்கி கோயிலில் இருந்து திருச்செந்துாருக்கு சைக்கிள் யாத்திரையை பக்தர்கள் மேற்கொள்ள உள்ளனர். ஏற்பாடுகளை குருவடியார் இலக்குமணன் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.