பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமானதும், சுமார் 2500ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயமும், கோச்செங்கோட்சோழனால் கட்டப்பட்டதுமான திருச்சி திருவாணைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் மண்டல பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனி பெருவிழா 48நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடுவது வழக்கம். அதன்படி இன்று காலை பங்குனித்தேர் திருவிழா எனப்படும் மண்டல பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது, முதல் நாளான இன்று ரிஷபக்கொடிக்கு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் சோமாஸ்கந்தர் அம்பாள் முன்னிலையில் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள தங்ககொடிமரத்தில் பெரிய கொடியானது ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சோமாஸ்கந்தர், அம்பாள் மற்றும் விநாயகர், சுப்ரமணியசாமி மற்றும் சண்டிகேஸ்வரருடன் பல்லக்கில் எழுந்தருளி வீதிஉலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு வழிபாடு செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேர்திருவிழா ரதாரோஹனம் எனப்படும் திருத்தேர் வைபவம் வருகிற மார்ச் 30ம்தேதி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் உதவியாளர் சுரேஷ், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.