பதிவு செய்த நாள்
08
மார்
2025
04:03
திருவாலங்காடு; திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், தினமும் 2,000க்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.
இக்கோவிலில், 2010 முதல் சனிக்கிழமை தோறும் மாந்தீஸ்வரர் பரிகார பூஜை நடைபெற்று வருகிறது. கொரோனாவுக்கு பின், 2023 மார்ச் முதல் மாந்தீஸ்வரர் பூஜை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த இந்த பூஜையில், காலை 6-:00 முதல் 12:00 மணி வரை, மூன்று குழுக்களாக 160 –-- 200 பக்தர்கள் வரை பூஜையில் பங்கேற்று வருகின்றனர். இதற்கு கட்டணமாக, 1,600 ரூபாயை கோவில் நிர்வாகம் நிர்ணயித்து உள்ளது. பெரும்பாலான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து, இரண்டு முதல் ஆறு மணி நேரம் பயணித்து, காலை நடைபெறும் பூஜையில் பங்கேற்கின்றனர். சனிக்கிழமை காலை கோவில் அலுவலகத்தில் டிக்கெட் வினியோகிக்கப்படுகிறது. இந்த டிக்கெட்டை பெற குறைந்தது, இரண்டு மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. கட்டுக்கடங்காத கூட்டம் வாரந்தோறும் வரும் நிலையில், நீண்ட வரிசையை கண்டு பலரும் பூஜையில் பங்கேற்காமல் திரும்பி செல்வதாக கூறுகின்றனர். நீண்ட நேரம் காத்திருப்பதால் அலைச்சல் ஏற்படுவதாக பக்தர்கள் குமுறுகின்றனர். இதற்கு முன், ‘ஆன்லைன்’ வாயிலாக பரிகார பூஜைக்கான டிக்கெட் பெறப்பட்ட போது சிரமமின்றி இருந்ததாக தெரிவிக்கின்றனர். எனவே, மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கான டிக்கெட்டை, மீண்டும் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் வசதியை, திருத்தணி கோவில் நிர்வாகம் கொண்டுவர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.