பதிவு செய்த நாள்
08
மார்
2025
04:03
விருத்தாசலம்; விபச்சித்து முனிவருக்கு, விருத்தகிரீஸ்வரர் சுவாமி காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சியில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவம் கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை, மாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வீதியுலா நடந்து வருகிறது. இந்நிலையில், 6ம் திருவிழாவான இன்று விருத்தகிரீஸ்வரர் கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு, விருத்தகிரீஸ்வரர் சுவாமி காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. அதையொட்டி, காலை 8:00 மணிக்கு விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்ரமணியர், விருத்தாம்பிகை, உடனுறை விருத்தகிரீஸ்வரர், பாலாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் நுாற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். பகல் 12:30 மணியளவில் நுாற்றுகால் மண்டபத்தின் எதிரே உள்ள உற்சவ மண்டபத்தில் எழுந்தருளிய விபச்சித்து முனிவருக்கு, பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தர மகா தீபாரதனை நடந்தது. அதன்பின், கோபுர வாசல் வழியாக பஞ்ச மூர்த்திகள், விபச்சித்து முனிவர் எழுந்தருள பக்தர்கள் மலர் துாவி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது. வரும் 11ம் தேதி தேரோட்டம், 12ம் தேதி மாசிமக பிரம்மோற்சவம், 13ம் தேதி தெப்பல் உற்சவம், 14ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.