பதிவு செய்த நாள்
10
மார்
2025
12:03
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் ரோட்டில் உள்ள அங்காளம்மன் கோவிலில் பூக்குண்டம் திருவிழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பிப்., 27ம் தேதி கொடியேற்றுதல், பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, இம்மாதம், 5ம் தேதி வரை தினசரி மாலை, 7:00 மணிக்கு கோயில் சுற்றுபூஜை, தீப வழிபாடு நடந்தது. 6ம் தேதி இரவு, 7:00 மணிக்கு ஆபரணம் எடுத்து வருதல், இரவு, 8:00 மணிக்கு அம்மன் அழைத்தல் நடந்தது. 7ம் தேதி மண்ணுடையாருக்கு மரியாதை செலுத்துதல், முத்துடைத்தல், பேச்சியம்மன் விழா துவக்கம், சிரசு எடுத்து வருதல், மயான பூஜை ஆகியன நடந்தன. நேற்று முன்தினம் அதிகாலை சக்தி கரகம், குண்டத்தில் பூ வளர்த்தல் நடந்தது. நேற்று காலை, 5:00 மணிக்கு அக்கினி கரகம் அழைத்தல், 8:00 மணிக்கு பூ மிதித்தல், காலை, 10:00 மணிக்கு அக்னி அபிஷேகம் தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இன்று மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இம்மாதம், 16ம் தேதி வசந்த பூஜையுடன் விழா நிறைவடைகிறது.