பதிவு செய்த நாள்
15
மார்
2025
01:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற காமாட்சியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில், பிரம்மோத்சவம் 11 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான பிரம்மோத்சவம் கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து வெள்ளி விருஷப வாகனத்திலும், இரவு தங்க மான் வாகனத்திலும், எழுந்தருளிய காமாட்சியம்மன், நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார்.
இரண்டாம் நாள் உத்சவமான கடந்த 4ம் தேதி காலை மகர வாகனத்திலும், இரவு சந்திர பிரபையிலும் வீதியுலா வந்தார்.
மூன்றாம் நாளான கடந்த 5ம் தேதி காலை தங்க சிம்ம வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும், நான்காம் நாள் உத்சவமான கடந்த 6ம் தேதி காலை தங்க சூரிய பிரபையிலும், இரவு தங்க ஹம்ஸ வாகனத்திலும் உலா வந்தார்.
ஐந்தாம் நாள் உத்சவமான கடந்த 7 ம் தேதி காலை தங்க பல்லக்கிலும், இரவு நாக வாகனத்திலும், ஆறாம் நாள் உத்சவமான கடந்த 8 ம் தேதி காலை முத்து சப்பரத்திலும், இரவு தங்க கிளி வாகனத்திலும் காமாட்சியம்மன் உலா வந்தார்.
இதில், ஏழாம் நாள் உத்சவமான கடந்த 9ம் தேதி காலை தேரோட்டமும், எட்டாம் நாள் உத்சவமான 10ம் தேதி காலை, பத்ரபீடத்திலும், இரவு குதிரை வாகன உத்சவமும் நடந்தது.
ஒன்பதாம் நாள் பிரபல உத்சவமான வெள்ளி ரதம் உத்சவம் கடந்த 11ம் தேதியும், 10ம் நாள் உத்சவமான சரபமும், தொடர்ந்து பஞ்சகங்கை தீர்த்தத்தில் தீர்த்தவாரியும் நடந்தது. 11ம் நாளான நேற்று முன்தினம் இரவு தங்க காமகோடி விமானத்தில் காமாட்சியம்மன் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார்.
நேற்று காலை மூலவர் காமாட்சியம்மனுக்கு விஸ்வரூப தரிசனம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
முதல் நாள் விடையாற்றி உத்சவம் நேற்று இரவு துவங்கியது. தொடர்ந்து விடையாற்றி உத்சவம் 8 நாட்கள் நடக்கிறது.
ஏற்பாட்டை காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் ஆதீன பரம்பரை கர்த்தாவின் ஸ்ரீகார்யம் சுந்தரேச ஐயர், கோவில் உதவி ஆணையர்,செயல் அலுவலர் ராஜலட்சுமி, கோவில் மணியகாரர்சூரியநாராயணன், கோவில் ஆதீனபரம்பரை ஸ்தலத்தார், ஸ்தானீகர்கள் செய்துஉள்ளனர்.