ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா; கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2025 10:03
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.
விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4:30 மணிக்குமேல் மகா கணபதி பூஜை, அனுக்ஞை பூஜை, புண்யாக வாசனமும், வாஸ்து சாந்தி பூஜை, காப்பு கட்டுதல் நடந்தது. பின்னர் காலை 6:30 மணிக்கு மேல் மாரியம்மன் கோயில் தெருவில் இருந்து நகரின் பல்வேறு வீதிகள் வழியாக சுற்றி கொடி பட்டம் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகள் செய்து காலை 8 :10 மணிக்கு கோயில் அர்ச்சகர் சுந்தர் கொடி பட்டம் ஏற்றினார். அப்போது கூடி இருந்த திரளான பக்தர்கள் குலவையிட்டு அம்மனை வணங்கினர். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பெரிய மாரியம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து தினமும் காலை 10:00 மணிக்குமேல் அம்மன் மண்டகப்படி எழுந்தருளும், இரவு 10:00 மணிக்குமேல் வெவ்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. தினமும் இரவு 6:00 மணிக்குமேல் கோயில் முன்பு ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. மார்ச் 29 மதியம் 12: 35 மணிக்கு மேல் பக்தர்கள் பூக்குழி இறங்குதலும், மார்ச் 30 காலை 11:00 மணிக்குமேல் தேரோட்டமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.