நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா; பூப்பல்லாக்கில் அம்மன் நகர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2025 04:03
நத்தம்; தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கடந்த 3 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.மறுநாள் பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்து கோவிலில் மஞ்சள் காப்பு கட்டி 15நாட்கள் விரதம் தொடங்கினர்.தொடர்ந்து வந்த வெள்ளி மற்றும் செவ்வாய்கிழமை இரவுகளில் மயில், சிம்மம்,அன்ன வாகனங்களில் அம்மன் சர்வ அலங்காரத்தில் மின் ரதத்தில் எழுந்தருளி நகர்வலம் வந்து மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய திருவிழாவான பூக்குழி திருவிழா கடந்த 18-ம் தேதி செவ்வாய்க்கிழமை நடந்தது. முன்னதாக விழா நாட்களில் அம்மனுக்கு மாவிளக்கு, கரும்பு தொட்டில், அரண்மனை பொங்கல் வைத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செலுத்தினர். தொடர்ந்து நேற்று காலையில் அம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு பல்வேறு வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லாக்கில் காமாட்சி அலங்காரத்தில் அம்மன் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மன்குளத்திலிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் விடிய விடிய நகர்வலம் வந்தார். இதில் வழிநெடுகிலும் பக்தர்கள் ஆங்காங்கே மண்டகப்படிகளில் நின்று தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களை நேர்த்திக்கடன்களை பெற்றுக் கொண்ட மாரியம்மன் கோவிலுக்கு சென்று அங்கு இருப்பிடம் போய் சேர்ந்தது. இத்துடன் இந்த ஆண்டு மாசித்திருவிழா இனிதே நிறைவு பெற்றது.