பதிவு செய்த நாள்
24
மார்
2025
12:03
பழைய வண்ணாரப்பேட்டை; பழைய வண்ணாரப்பேட்டை, மணிகண்டன் 3வது தெருவில், பார்வதி அம்மன் கோவில் உள்ளது. 100 ஆண்டு கால பழமை வாய்ந்த இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள, 150 ஆண்டு பழமை வாய்ந்த அரச மரம் கோவிலின் தலவிருச்சமாக உள்ளது. இக்கோவிலில், ஹிந்து சமய அறநிலைய துறை, 17.30 லட்சம் ரூபாய் திருப்பணிகள் செய்ய உள்ளதாக அறிவித்தது. இதற்காக பழைய கோவிலை இடித்து, அரச மரத்தையும் வெட்டி விட்டு, புதிய கோவிலை கட்ட உள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அரச மரத்தை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதிவாசிகள், நேற்று கையெழுத்து இயக்கம் நடத்தினர். இதில், 100க்கும் மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கோவில் திருப்பணி மேற்கொள்வது குறித்து, ஊர் மக்களிடம் ஹிந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் எந்தவித கருத்துகேட்பு பணிகளை மேற்கொள்ளவில்லை. திருப்பணி நடப்பது குறித்து, எந்தவித அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை. கோவில் திருப்பணிகளை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், 150 ஆண்டு கால அரச மரத்தை வெட்டாமல், கோவில் திருப்பணிகளை ஹிந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.