பதிவு செய்த நாள்
29
மார்
2025
05:03
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும், 4ம் தேதி, கும்பாபிஷேகம் நடக்கிறது.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், கடந்த 2013ம் ஆண்டு, கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதால், கடந்த, ஜனவரி 20ம் தேதி, பாலாலயம் செய்யப்பட்டு, கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகள், இன்றுடன் நிறைவு பெறவுள்ளது. இதனையடுத்து, வரும் ஏப்., 1ம் தேதி, காலை, 8:45 மணிக்கு, மங்கள இசை, திருமுறை பாராயணம், சாந்தி ஹோமம், திசா ஹோமம், புனித மண் எடுத்தல், புனித நீர் எடுத்தல், புனித அனல் எடுத்தல் நடக்கிறது. மாலை, 4:35 மணிக்கு மேல், எண் வகை மருந்து சாத்துதல், முளைப்பாலிகை இடுதல், கங்கணம் கட்டுதல், முதல் கால யாக பூஜையும்; ஏப்., 2ம் தேதி காலை, இரண்டாம் கால யாக பூஜையும், மூன்றாம் காலையாக பூஜையும்; 3ம் தேதி, காலை, நான்காம் கால யாக பூஜையும், மாலை, 5ம் கால யாக பூஜையும் நடக்கிறது. ஏப்ரல் 4ம் தேதி, காலை, 4:30 மணிக்கு, ஆறாம் கால யாக பூஜையும், காலை 6:00 மணி முதல் 6:45 மணிக்குள், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும்; காலை, 8:30 மணிக்கு, மருதாச்சலம் மூர்த்தி விமானம், ஆதிமூலவர் விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார விமானங்களுக்கு, கும்பாபிஷேகமும்; காலை, 9:05 மணிக்கு, ஆதிமூலவர், விநாயகர், மருதாசலமூர்த்தி, பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வீரபாகு, கரிவரதராஜ பெருமாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு, மஹா கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. தொடர்ந்து மாலை, 5:30 மணிக்கு, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு, திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது.