பதிவு செய்த நாள்
08
ஏப்
2025
10:04
திருவாலங்காடு; திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நடந்து வரும் பங்குனி உத்திர விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, காலை 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில் உத்சவ மூர்த்தியான சோமாஸ்கந்தர் எழுந்தருளினார். பின், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 9:30 மணிக்கு திருத்தணி கோவில் இணை ஆணையர் ரமணி கொடியசைத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். மாடவீதிகளில் திருவீதியுலா வந்த தேர், பகல் 12:40 மணிக்கு காளியம்மன் கோவில் வளாகத்தில் நின்றது. மாலை 3:30 மணிக்கு புறப்பட்டு, மாலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தை அடைந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில், பா.ம.க.,வைச் சேர்ந்த சவுமியா அன்புமணி, திருவாலங்காடு முன்னாள் ஒன்றிய சேர்மன் ஜீவா விஜயராகவன் உட்பட 30,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திருமழிசை; திருமழிசை குளிர்ந்த நாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வேரர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று காலை 9:00 மணிக்கு ஒத்தாண்டேஸ்வரர் சுவாமி தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், 9:30 மணிக்கு பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர், மதியம் 2:00 மணிக்கு நிலைக்கு வந்தது. மாலை 5:00 மணிக்கு வசந்த மண்டபத்தில் எழுந்தருளலும், இரவு 8:00 மணிக்கு மேல் வசந்த மண்டபத்திலிருந்து கோவிலுக்கு எழுந்தருளலும் நடந்தது. வரும் 10ம் தேதி காலை நடராஜர் தரிசனமும், பகலில் தீர்த்தத்தொட்டி உத்சவமும், மாலை திருக்கல்யாணமும், இரவு பஞ்சமூர்த்திகள் உத்சவமும் நடைபெறும். வரும் 13ம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா நிறைவுபெறுகிறது.