பதிவு செய்த நாள்
11
ஏப்
2025
04:04
பழநி; பழநியில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. திராளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பங்குனி உத்திர திருவிழா பழநி முருகன் கோயில் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள திரு ஆவினன்குடி கோயிலில் ஏப். 5 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது . தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. ஆறாம் நாளில்மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி யாகத்தில் வைக்கப்பட்ட கலச புனித நீரில் சுவாமி- வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் ,சிறப்பு தீபாராதனை, இரவு சன்னதிவீதி, கிரி வீதிகளில் வெள்ளி தேரோட்டம் நடந்தது.
இன்று பங்குனி உத்திர தேரோட்டத்தை முன்னிட்டு மதியம் 12:00 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளினார். அவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4:30 மணிக்கு பங்குனி உத்திர தேரோட்டம் துவங்கியது. திரளான பக்தர்கள் கலந்து தேரை வடம் பிடித்தனர். பங்குனி உத்திர விழாவை யொட்டி, பழநி மலைக்கோவிலில், தீர்த்தக் காவடிகளுடன் குவிந்த பக்தர்கள், பல மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஏப்.14 இரவு 11:00 மணிக்கு மேல் கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைகிறது.