பொட்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; சீர் கொண்டு வந்த கிராம மக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2025 05:04
இளையான்குடி; இளையான்குடி அருகே முள்ளியரேந்தலில் பொட்டியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்காக கிராம மக்கள் தலைசுமையாக சீர் கொண்டு வந்தனர் விழாவில் மதுரை ஆதீனம் ராமநாதபுரம் மன்னர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இளையான்குடி அருகே உள்ள முள்ளிரேந்தல் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இங்கு குடி கொண்டிருக்கும் பொட்டியம்மனுக்கா பல லட்சம் செலவில் புதிதாக கோவில் கட்டும் திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்து முடிந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று இரவு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலில் புதிதாக வைக்கப்படும் அம்மன் சிலை மற்றும் கோபுர கலசம் ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றி ஊர்வலமாக கிராம முழுவதும் சுற்றி வந்தனர்.இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் சீர் கொண்டு வரும் விதமாக பொட்டியம்மனுக்காக கும்பாபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை தலையில் சுமந்தவாறு செண்டை மேளம்,உடுக்கை மேளம் உள்ளிட்ட பல்வேறு மேளதாளங்கள் முழங்க கோவிலுக்கு கொண்டு வந்தனர். இன்று காலை யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று காலை 9:50 மணிக்கு கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டு .அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றது.அன்னதானம் நடந்தது.விழாவில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், ராமநாதபுரம் மன்னர் நாகேந்திர சேதுபதி, கோயில் நிர்வாகி ரவிராஜா மற்றும் முள்ளியரேந்தல் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.