மயிலம்; மயிலம் முருகன் கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் தெப்பல் உற்சவம் நடந்தது. கோவிலில், பங்குனி உத்திர விழா கடந்த 2ம் தேதி துவங்கியது. கடந்த 10ம் தேதி தேர் திருவிழாவும், தெப்பல் உற்சவமான நேற்று 11ம் தேதி இரவு 11:50 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின், மலைக் கோவிலில் இருந்து சுப்ரமணியர் சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் கோவில் அருகே உள்ள குளத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பலில் வள்ளி, தெய்வானை சமேதராய் சுப்ரமணியர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.