பதிவு செய்த நாள்
15
ஏப்
2025
10:04
நாகை; நாகையில் கோலாகலமாக நடைபெற்ற கற்பகமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் கோலாட்டம், கும்மியாட்டத்துடன் களைகட்டியது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திகடன் நிறைவேற்றினர்.
நாகை மாவட்டம் கல்லார் கற்பகமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 10,ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக துவங்கியது. நாள்தோறும் அம்பாள், சிறப்பு சந்தன காப்பு அலங்காரம், வளையல் அலங்காரத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்சியான இன்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கீச்சாங்குப்பம் காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலத்தில் மேளதாள வாத்தியங்களுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மஞ்சலாடையுடன் பால் குடங்களை சுமந்து வந்தனர். அப்போது வழி நெடுகிலும் மேளதாளத்திற்கு ஏற்றவாறு பெண் பக்தர்கள் கோலாட்டம், கும்மியாட்டம் ஆடி வந்தனர். களை கட்டிய பால்குட ஊர்வலத்தில், பெண் பக்தர்கள் சிலர் பக்தி பரவசத்தில் சாமி வந்து ஆடினர். பின்னர் கல்லார் கற்பக மாரியம்மன் கோயிலை சென்றடைந்த பக்தர்கள், அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். கல்லார் கற்பகமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், நாகை மாவட்டத்தை சேர்ந்த 27, கிராம மீனவர்கள் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.