பதிவு செய்த நாள்
15
ஏப்
2025
10:04
திருப்பரங்குன்றம்; தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரியமாக நடந்து வரும் திருப்பரங்குன்றம் கிராமத்தினர் சார்பில் மலைக்கு பின்புறமுள்ள கோயில் நிலத்தில் நான்கு ஏர் பூட்டி உழும் நிகழ்ச்சி நடந்தது.
கிராமத்தினர், விவசாயிகள் நேற்று காலை குழந்தைகளுடன் புத்தாடைகள் அணிந்து, புதிய தார் குச்சி நுனியில் ஆணி அடித்து அதில் பூ சுற்றி கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து மலையைச் சுற்றி வந்து நான்கு ஏர்களில் காளைகள் பூட்டி தென்பரங்குன்றத்திலுள்ள கோயில் நிலங்களை உழுதனர். பின்பு கல்வெட்டு குகைக் கோயில் முன்பு கிராமத்தினர், ஏழு குளம் பாசன விவசாயிகள் கூட்டம் நடத்தி திருவிழா கொண்டாட்டங்கள், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களுக்கான கூலி நிர்ணயம் செய்து ஆலோசனை நடத்தினர். இரவு கிராமத்தினர் சார்பில் கோயிலில் பூஜை நடந்தது. மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மக்கள் நலம் பெற வேண்டியும் ஆண்டாண்டு காலமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
கொட்டாம்பட்டி: கம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட அலங்கம்பட்டி, பெரிய, சின்ன கற்பூரம்பட்டியில் உள்ள மந்தையம்மன் கோயில்களில் நல்லேர் பூட்டுதல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் விவசாயிகள் தங்கள் உழவு கருவிகளான கலப்பை, மண்வெட்டி, அரிவாள் உள்ளிட்ட உபகரணங்களை சுவாமி முன்பு வைத்து வழிபட்டனர். அதைதொடர்ந்து உழவு பணிகளை துவங்கினர்.