முருகனின் ஏழாம் படைவீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், சித்திரை மாதத்தின் முதல் நாளான, தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, நடைதிறக்கப்பட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. காலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். உச்சிகால பூஜை முடிந்து, உற்சவமூர்த்தியான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தமிழ் புத்தாண்டையொட்டி, கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள், பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.