பொங்கலூர்; பொங்கலூர் பாதைகுப்புச்சி பாளையம் விநாயகர், மாகாளியம்மன், பட்டத்தரசி அம்மன், மாதேஸ்வரன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த புதன்கிழமை துவங்கியது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முளைப்பாளிகை, தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, முதற்காலயாக வேள்வி, திருப்பள்ளி எழுச்சி, திருமஞ்சனம், இரண்டாம் கால யாக வேள்வி, விமான கலசம் நிறுவுதல், மூன்றாம் காலயாக வேள்வி நடந்தது. சண்முகசுந்தரம், சம்பத்குமார் தலைமையிலான வள்ளி கும்மியாட்டம், வாவிபாளையம் ஆனந்த கிருஷ்ணனின் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. இன்று காலை,5:30 மணிக்கு விநாயகர், மாதேஸ்வரன், பட்டத்தரசி அம்மன் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 6:00 மணிக்கு நான்காம் கால வேள்வி, 7:30 மணிக்கு மாகாளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். ஓம் சக்தி, பராசக்தி கோசம் எழுப்பி பக்தர்கள் கோபுர தரிசனம் செய்தனர். அன்னதானம், விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.