பதிவு செய்த நாள்
02
மே
2025
05:05
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே திட்டையில், வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தனி சன்னதியில் ராஜகுருவாக தெட்சிணாமூர்த்தி எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில் குருபகவான் வரும் மே 11 ம் தேதி மதியம் 1.19 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பிரவேசம் அடைகிறார். அன்றைய தினம் தெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாரதனை ஆகியவை நடைபெறவுள்ளது. இதையொட்டி, கோவிலில் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது. இதில் கோவில் செயல் அலுவலர் அசோக்குமார், தக்கார் விக்னேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து குரு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் மற்றும் மீன ராசி காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குருபெயர்ச்சி முடிந்ததும் மே 23ம் தேதி லட்சார்ச்சனையும், 24,25ம் தேதிகளில் சிறப்பு பரிகார ஹோமமும் நடைபெறவுள்ளது.