திருநெல்வேலியில் கொட்டி தீர்த்த மழை : சங்கரநாராயண சுவாமி கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2025 10:05
திருநெல்வேலி; திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பலத்த கோடை மழை பெய்தது. சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மதியம் 3:00 மணிக்கு பிறகு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வெள்ளங்குழி, கே.டி.சி.,நகர் உள்ளிட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சங்கரன்கோவிலில் தாழ்வான பகுதிகளான திருவேங்கடம் சாலை, தெற்கு ரதி வீதி போன்ற பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து செல்வதால் அப்பகுதிகளில் கடுமையான துர்நாற்றம் வீசியது. சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் மழை நீர் புகுந்தது மழை நீரில் நின்ற படி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கோவில் நிர்வாகத்தினர் போர்க்கால அடிப்படையில் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.