பதிவு செய்த நாள்
13
மே
2025
05:05
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவிலில் பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் சித்ரா பவுர்ணமி தேரோட்டம் விமர்சையாக நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பாலமலையில் ரங்கநாதர் திருக்கோவில் உள்ளது. ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியையொட்டி தேர் திருவிழா நடக்கும். இந்த ஆண்டு தேர் திருவிழா கடந்த, 6ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, அன்ன வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனங்களில் ரங்கநாதர் தாயார்களுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பத்தாம் தேதி செங்கோதை அம்மன் அழைப்பு நடந்தது. 11ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், புஷ்ப பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை யானை வாகன உற்சவமும், அதையடுத்து சின்னத்தேர் உற்சவமும், மாலை, 6:00 மணிக்கு பெரியதிருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, கோவிந்தா கோஷத்துடன் தேரை இழுத்தனர். இன்று செவ்வாய்க்கிழமை பரிவேட்டை, குதிரை வாகன உற்சவம் நடந்தது. நாளை சேஷ வாகன உற்சவம் மற்றும் தெப்போற்சவம் நடக்கிறது. நாளை சந்தன சேவை சாற்றுமுறை நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், கோவில் பரம்பரை தர்மகர்த்தா ஜெகதீசன் தலைமையில் நடந்து வருகிறது.