கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா; திருநங்கைகள் தாலி கட்டி வழிபாடு
பதிவு செய்த நாள்
14
மே 2025 10:05
உளுந்தூர்பேட்டை; கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவில் திருநங்கைகள், பக்தர்கள் தாலி கட்டி கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா துவங்கி நடந்து வருகிறது. கடந்த 29ம் தேதி கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சாகை வார்த்தலுடன் விழா துவங்கியது. இந்த சாகை வார்த்தல் விழாவில் கூவாகம், தொட்டி, நத்தம், வேலூர், அண்ணாநகர், கொரட்டூர், சிவலியாங்குளம் உள்ளிட்ட 7 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கூழ் குடங்களுடன் ஊர்வலமாக வந்து கோவிலில் படையலிட்டு வழிபாடு செய்தனர். பின்னர் தேங்காய் உடைத்து தீபாராதனை வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். திருவிழா சாகை வார்த்தல் விழாவுடன் துவங்கியது. 30ம் தேதி பந்தலடியில் தாலி கட்டுதல் (பாரதம் ஆரம்பம்) நிகழ்ச்சியும், 1ம் தேதி சந்தனு சரிதம், இரவு 10 மணிக்கு சுவாமி புறப்பாடும், 2ம் தேதி பீஷ்மர் பிறப்பும், இரவு சுவாமி புறப்பாடும், 3 ம் தேதி தர்மர் பிறப்பும் இரவு சுவாமி புறப்பாடும், 4ம் தேதி பாஞ்சாலி பிறப்பும், இரவு சுவாமி புறப்பாடும், 5ம் தேதி பகாசூரம் வதம், இரவு சுவாமி புறப்பாடும், 6ம் தேதி பாஞ்சாலி திருமணமும், இரவு சுவாமி புறப்பாடும், 7 ம் தேதி கூத்தாண்டவர் பிறப்பும், இரவு சுவாமி புறப்பாடும், 8 ம் தேதி இராஜசுய யாகம், இரவு சுவாமி புறப்பாடும், 9ம் தேதி விராடபர்வம், வெள்ளிக்கால் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. 10ம் தேதி கிருஷ்ணன் தூது, இரவு சுவாமி புறப்பாடும், 11ம் தேதி காலை அரவான்பலி, கூத்தாண்டவர் சுவாமிக்கு பாலாலயம் நடந்தது. 12ம் தேதி மாலை கம்பம் நிறுத்துதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று ( 13ம் தேதி) இரவு சுவாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது திருநங்கைகள், பக்தர்கள் தாலி வாங்கி கொண்டு கோவிலுக்குள் சென்று வழிப்பட்டு பூசாரி கைகளால் திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்ளும் (தாலி கட்டுதல்) நிகழ்ச்சி நடந்தது. அப்போது பல திருநங்கைகள் ஆடம்பர ஆடைகளுடன், அழகிய தோற்றத்துடன் கூட்டத்தில் இருப்பவர்களை வியப்பில் ஆழ்த்தினர். திருவிழாவையொட்டி பாதுகாப்பு பணிகளுக்காக எஸ்.பி. க்கள் கள்ளக்குறிச்சி சஜத்சதுர்வேதி, கடலூர் ஜெயக்குமார் தலைமையில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இருந்து 15 டி.எஸ்.பி., க்கள். 30 இன்ஸ்பெக்டர்கள், 65 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட. 1150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று(14ம் தேதி) காலை 6.30 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது. மாலை பந்தலடி பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல் நிகழ்ச்சியும், 15ம் தேதி விடையாத்தி, 16ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
|