பதிவு செய்த நாள்
22
மே
2025
10:05
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஜூன், 4ல், விபீஷணர் பட்டாபிஷேகத்தையொட்டி கோவில் நடை அடைக்கப்படுகிறது.
ராமாயண வரலாற்றில் தொடர்புடைய ராமேஸ்வரம் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் இத்திருத்தல வரலாற்றை பக்தர்களுக்கு நினைவுபடுத்தும் விதமாக, ராமலிங்க பிரதிஷ்டை விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி வரும், ஜூன், 3ல் விழா துவக்கப்பட்டு, அன்று மாலை, 5:00 மணிக்கு மேல் ஸ்ரீ ராமர், ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். ஜூன், 4ல் கோவிலில் இருந்து ஸ்ரீ ராமர், சீதை, லட்சுமணன், அனுமான் ஆகியோருடன் பல்லக்கில் புறப்பாடாகி, தனுஷ்கோடி அருகே கோதண்ட ராமர் கோவிலில் எழுந்தருளியதும், அன்று மதியம், 12:00 மணிக்கு மேல், விபீஷணருக்கு ராமர் பட்டாபிஷேகம் சூட்டுவார். இதில், அன்று அதிகாலை, 2:30 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, 3:00 முதல், 3:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடக்கும். தொடர்ந்து கால பூஜை, சாயரட்சை பூஜை முடிந்ததும், ஸ்ரீ ராமர் புறப்பாடானதும் காலை, 7:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும். அன்று மாலை, 5:00 மணிக்கு பின், கோதண்டராமர் கோவிலில் இருந்து, ராமர் கோவிலுக்கு திரும்பியதும் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். ஜூன், 5ல் கோவிலுக்குள் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடக்கும் என, கோவில் இணை ஆணையர் செல்லத்துரை தெரிவித்தார்.