பதிவு செய்த நாள்
27
மே
2025
03:05
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, சூலக்கல் மாரியம்மன் கோவிலில், தேர்த்திருவிழாவையொட்டி, கிராம மக்கள், மடிப்பிச்சை ஏந்தியும், அடி அளந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
பொள்ளாச்சி அருகே, பிரசித்தி பெற்ற சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா, 18 கிராமங்களில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருவிழாவை முன்னிட்டு, கடந்த, 12ம் தேதி ஆற்றில் இருந்து மூங்கில் கம்பம், கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வேல் புறப்பாடு, பூச்சாட்டு விழா மற்றும் கிராமசாந்தி, வாஸ்து சாந்தி, கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல், கொடியேற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இன்று வரை, அம்மன் திருவீதி உலாவும் நடந்தது. திருவிழாவையொட்டி பாரம்பரிய முறைப்படி மக்கள் வழிபாடு செய்தனர். அவ்வகையில், இன்று கொட்டும் மழையிலும், கிராம மக்கள், ஈரத்துணியுடன் வேப்பிலை ஏந்தி, வீடு வீடாக சென்று, மடிப்பிச்சை பெற்றனர்.
அதன்பின், தரையில் அடி அளந்து கும்பிட்டு வழிபாடு செய்தபடி கோவிலுக்கு வந்தனர். கோவிலை வலம் வந்த பின், கம்பத்துக்கு முன் மடிப்பிச்சையாக பெற்ற அரிசியை வழங்கி வழிபட்டனர். மேலும், கோவில் உள்ள கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றியும், பூவோடு எடுத்தும் பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதேபோல, பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி, அலகு குத்தி ஊர்வலமாக வந்து வழிபாட்டனர். அப்போது, பெண்கள் பக்தி பாடல்களை பாடினர். கோவிலில், குழந்தைகள் உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டி உருவாரங்கள் வைத்து வழிபட்டனர். மேலும், குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டியும், திருமணம் நடைபெற வேண்டி மஞ்சள் கயிறை கட்டியும் அம்மனை வழிபட்டனர்.
தேரோட்டம்; நாளை 28ம் தேதி காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு, பொங்கல் வைத்தல், இரவு, 7:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 29ம் தேதி மாலை, 4:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 30ம் தேதி மாலை, இரண்டாம் நாள் தேர் வடம் பிடித்தல், 31ம் தேதி மாலை, மூன்றாம் நாள் தேர்வடம் பிடித்தல் நடக்கிறது. வரும், ஜூன் 1ம் தேதி மதியம், 12:00 மணிக்கு மஹா அபிஷேகம் நடக்கிறது.