பதிவு செய்த நாள்
28
மே
2025
02:05
பாலக்காடு; பாலக்காடு அருகே சாத்தபுரம் பிரசன்ன மஹா கணபதி கோவில் கும்பாபிஷேக தின உற்சவம் கோலாகலமாக நடந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கல்பாத்தி அருகில் உள்ளது சாத்தபுரம் பிரசன்ன மஹா கணபதி கோவில். இங்கு வைகாசி மாதம் கும்பாபிஷேக தின உற்சவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு உற்சவ நிகழ்ச்சிகள் கடந்த மே 16 தேதி தொடங்கியது. கலை நிகழ்ச்சிகள், பஜனோற்சவம், டோலோற்சவம், ராதா கல்யாண உற்சவம், ஆஞ்சநேய உற்சவம் என பல நிகழ்ச்சிகள் உற்சவத்தை ஒட்டி நடந்தது. கும்பாபிஷேக தின நாளான இன்று காலை 5:00 மணிக்கு அஷ்டபதி, 5:30க்கு மஹா கணபதி ஹோமம், 6:30 மணிக்கு அபிஷேகம், நித்திய பூஜை ஆகியவை நடந்தது. 8:00க்கு மூலவருக்கு பூர்ணாபிஷேகம் நடைபெற்றது. 9:30 மணிக்கு ஒற்றைப்பாலம் ஹரியின் தலைமையில் 25 கலைஞர்கள் கலந்து கொண்டு பஞ்சவாத்தியம் முழங்க ஆடை ஆபரணங்கள் அணிந்த குருவாயூர் சித்தார்த்தன் என்ற யானை மீது உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் நடந்தது. 11:30க்கு கும்பாபிஷேகம், 12:15 மணிக்கு புஷ்பாபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது. 12:30க்கு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பஞ்சவாத்தியம் முழங்க யானையின் அணிவகுப்புடன் " காழ்ச சீவேலி நடைபெற்றது.