செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளிக்காப்பு அணிவிக்கப்பட்டது. இரவு 12 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். இரவு 1 மணிவரை நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மன் பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் வழிபாட்டு குழுவினருடன் சேர்ந்து பாடினர். திண்டிவனம் ஆர்.டி.ஓ., மீனா பிரியதர்ஷினி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் சின்னதம்பி மற்றும் அறங்காவலர்கள் பங்கேற்றனர். செஞ்சி டி.எஸ்.பி., பன்னீர் செல்வம் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். விழாவை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.