மாசாணம் சுவாமி கோயில் திருவிழா; ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கறிவிருந்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2025 10:05
நரிக்குடி; நரிக்குடி மாசாணம் சுவாமி கோயில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கறி விருந்து நடந்தது. நரிக்குடி மறையூரில் கிருதுமால் ஆற்றங்கரையில் மாசாணம் சுவாமி கோயிலில் வைகாசி திருவிழாவில் நேற்று முன் தினம் சிறப்பு பூஜைகள் நடந்தன. மந்தையம்மன் கோயில் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட மாசாணம், அரியசாமி, வீரபத்ரசாமிகள் ஆலயத்தை வந்தடைந்தன. பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது. நேற்று முன் தினம் நள்ளிரவு எரிபூஜை நடந்தது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 100க்கும் மேற்பட்ட ஆடுகள், 200க்கும் மேற்பட்ட சேவல்கள் சுவாமிக்கு பலியிடப்பட்டன. அதனை உணவாக சமைத்து ஆலய வளாகத்தில், ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் அன்னதான நிகழ்ச்சி நடந்தது. மீதமுள்ள உணவுகளை எல்லைக்கு அப்பால் கொண்டு செல்லக் கூடாது என்பது ஐதீகம். அதுமட்டுமல்ல, ஆட்டுத்தலை, குடல், கால், தோல் என எதையும் கொண்டு செல்லக்கூடாது. இதையடுத்து ஏற்கனவே தோண்டப்பட்ட பெரிய பள்ளத்தில் போட்டு மூடி புதைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.