பதிவு செய்த நாள்
10
ஜூன்
2025
01:06
காரமடை; கோவை மாவட்டம், காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நம்மாழ்வார் உற்சவமூர்த்தி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வைணவத்தில் பன்னிரு ஆழ்வார்கள் முக்கியமானவர் நம்மாழ்வார். இவரது அவதார தினமான வைகாசி விசாகம் அனைத்து வைணவ திருக்கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி, கோவை மாவட்டம், காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் நேற்று அதிகாலை மூலவர் ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனமும், கால சந்தி பூஜை முடிந்து ஸ்ரீ நம்மாழ்வார் உற்சவ மூர்த்தியை ராமானுஜர் சன்னதியில் எழுந்தருள செய்யப்பட்டது. தொடர்ந்து விஸ்வக்ஷேனர் ஆராதனம் கலச ஆவாஹனம் மூலவர் ராமானுஜர் மற்றும் நம்மாழ்வார் உற்சவமூர்த்திக்கு ஸ்தபன திருமஞ்சனம் நடைபெற்றது. நம்மாழ்வார், சிறப்பு பட்டுடுத்தி வெள்ளி சப்பரத்தில் மேளதாளம் முழங்க வெண்பட்டு குடை சூழ ரங்க மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் முன் எழுந்தருளினார். அங்கு ரங்கநாதரிடம் இருந்து மாலை, சந்தனம், சடாரி பரிவட்ட மரியாதை செய்யப்பட்டது. பின்னர் ஸ்தலத்தார்கள் வேதவியாச பட்டர் திருமலை நாலான் சக்கரவர்த்தி ஆகியோர் திவ்ய பிரபந்த பாசுரங்களை சேவித்தனர். மீண்டும் ரங்கநாதரிடம் இருந்து மாலை சடாரி மரியாதை பெற்றுக் கொண்ட உற்சவமூர்த்தி நம்மாழ்வார் இராமானுஜர் சன்னதிக்கு எழுந்தருளினார். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில் மிராசுதாரர்கள், அறங்காவலர்கள், திருக்கோவில் நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.