பதிவு செய்த நாள்
10
ஜூன்
2025
03:06
கோவை; காட்டூர் பகுதி அனுப்பர்பாளையம், கடலூர் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதன் முதல் நிகழ்வாக கடந்த 6ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில், பஞ்ச கவ்வியம், கலச ஸ்தாபனம், தனலட்சுமி பூஜை, கோ பூஜை மற்றும் தீபாரதனை நடைபெற்றது. இரண்டாம் நாள் சோமகும்ப பூஜை, இரண்டாம் கால வேள்வி, திருமுறை பாராயணம், விசேஷ மூல மந்திர ஹோமம்,தேவி மகாமித்யம், லலிதா சகஸ்ரநாமம்,அபிராமி அந்தாதி, வஸ்திர சமர்ப்பணம் நிறைவாக தீபாரதனையுடன் நிறைவு பெற்றது. அன்று மாலை விமான கலச ஸ்தாபனம், எந்திர ஸ்தாபனம், அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் ஆகியன நடந்தது. கும்பாபிஷேக தினமான ஞாயிறு காலை 5.30மணிக்கு கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து காலை 7-45 மணியளவில் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கும்ப கலசத்திற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவர் அம்மனுக்கு 50 ரூபாய்நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை வழிபட்டனர்.