பதிவு செய்த நாள்
11
ஜூன்
2025
12:06
திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி விசாகத்தேர்த்திருவிழா, 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், சிவனடியார்களின் சிவகண வாத்திய இசையுடன், ஸ்ரீவிஸ்வேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
எட்டாம் நாளான நேற்று, ஸ்ரீவீரராகவப்பெருமாள் தேரோட்டம் நடந்தது. மாலை, 6:10 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. உள்ளி விலவு என்ற கொங்கு பெருஞ்சலங்கை ஆட்டமும், பாரம்பரிய மேளதாளம், காவடியாட்டம், பவளக்கும்மியாட்ட குழுவினரின் கலை நிகழ்ச்சிகளுடன் தேரோட்டம் களைகட்டியது. வஞ்சிபாளையம் தண்டபாணி காவடிக்குழுவினரின் ஆட்டம், திண்டுக்கல் சந்தோஷ் குழுவினரின் டோலக், அந்தியூர் வெள்ளை குதிரைகளின் நடனம், திடும்பம், கொங்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வீரராகவப்பெருமாள், பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்து, அருள்பாலித்தார். பக்தர்களின் ‘கோவிந்தா... கோவிந்தா...’ கோஷத்துடன், இரவு, 8:35 மணிக்கு நிலையை சென்றடைந்து, தீபாராதனை நடந்தது. தேரோட்டம் நிறைவு பெற்றதும், கடந்த இரண்டு நாட்களாக தேரில் வீற்றிருந்து, அருள்பாலித்த உற்சவமூர்த்திகள், கோவில்களுக்கு திரும்பினர். அதனை தொடர்ந்து, வண்டித்தாறை கட்டளை பூஜையும், சுவாமி திருவீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது.
அன்னதானம்; திருப்பூர் பிரதோஷ குழுவினர் சார்பில், தேர்த்திருவிழா அன்னதானம் நடந்தது. கடந்த இரண்டு நாட்களிலும், தேரோட்டத்துக்கு வந்திருந்த பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களில், 10 ஆயிரம் பக்தர்கள் அன்னதானத்தில் பங்கேற்றனர்.
தெப்போற்சவம்; இன்று மாலை, பரிவேட்டையும், நாளை ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவமும் நடக்கிறது. வரும், 13 ம் தேதி மகா தரிசனத்தில், ஸ்ரீநடராஜப்பெருமான்– சிவகாமியம்மன், திருவீதியுலா நடைபெறும். தொடர்ந்து, 14ம் கோவம்ச சமூக நல அறக்கட்டளையின் மஞ்சள் நீராட்டு உற்சவம் மற்றும் மலர் பல்லக்கு சேவையும், 15ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன், தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.