குச்சனூர் சனீஸ்வரன் கோயில் நதிக்கரையில் குவிந்துள்ள நேர்த்திக்கடன் விளக்குகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2025 11:06
சின்னமனூர்; குச்சனூர் சனீஸ்வரபகவான் கோயில் முன் ஓடும் சுரபி நதிக் கரையில் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்திய தீபங்கள்,வடை சட்டிகள் குவித்துள்ளதால் குளிக்க செல்லும் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர்.
குச்சனூரில் சனீஸ்வரபகவானுக்கென தனிக் கோயில் தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளது. சுயம்புவாக எழுந்தருளியுள்ள இந்த கோயிலில் முன் பகுதியில் சுரபி நதி செல்கிறது. பக்தர்கள் இந்த நதியில் குளித்து நேர்த்தி கடன்களை செலுத்தி சாமி தரிசனம் செய்வார்கள். ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் கூட்டம் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பெருந்திருவிழா நடைபெறும். ஆடி மாதம் வரும் நான்கு சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு குடிநீர், ஓய்வறை, கழிப்பறைகள் என எதுவும் இல்லை. நதியில் குளிக்கும் பெண்கள் உடை மாற்ற ஒரே ஒரு அறை உள்ளது அதுவும் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்திய விளக்குகளும், சிறிய வடைச்சட்டிகளும் பக்தர்கள் குளிக்கும் சுரபி நதிக்கரையில் கொட்டி வைத்துள்ளனர். இவற்றை அகற்றி நதிக்கரைகளை சுத்தம் செய்ய வேண்டும். கோயில் முன்புறம் உள்ள படித்துறைகளின் வடக்கு பக்கம் உள்ள படித்துறை குப்பை நிறைந்து காணப்படுகிறது. இதனால் நதியில் இறக்க பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். ஹிந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கோயிலில் அடிப்படை வசதிகள், சுகாதாரம் மேம்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.