பதிவு செய்த நாள்
22
ஜூன்
2025
10:06
மதுரை: மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டின் நிறைவாக, 5 லட்சம் பக்தர்கள் சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடி, பரவசம் ஏற்படுத்தினர். மாநாட்டில் பேசிய ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், முருகனைப்பற்றி இழிவாக யாரேனும் பேசினால் உங்கள் இதயம் நொறுங்க வேண்டாமா, பதற வேண்டாமா, துடிக்க வேண்டாமா, என்று ஆவேசமாக பேசினார்.
மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள மைதானத்தில் குன்றம் காக்க.. கோயிலை காக்க... எனும் தலைப்பிலான முருக பக்தர்களின் பிரமாண்ட மாநாடு இன்று (ஜூன் 22) மதியம் 3:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. ஆதீனங்கள், முக்கிய தலைவர்கள் பேசினர். 8 லட்சம் சதுர அடி பரப்பு மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது. இதில் 6 அடி உயரத்தில் சிறிய மேடையும், அதன் பின் 10 அடி உயரத்தில் பெரிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையின் மையத்தில் முருகன் வேலுடன் நிற்பது போன்ற பதாகையும், அதன் பின் கோவில் கோபுரமும், குன்றமும் இருக்கும் படி அமைக்கப்பட்டு இருந்தன.
கந்தசஷ்டி கவசம்
மாநாட்டில், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், மடாதிபதிகள், ஹிந்து முன்னணி, பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர் ராஜூ, செல்லுார் ராஜூ ஆகியோரும் பங்கேற்றனர். மைதானம் முழுவதும் முருக பக்தர்கள் குவிந்துள்ளனர்.
அமைச்சருக்கு சவால்
மாநாட்டில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வரவேற்றுப் பேசினார். அவர் பேசுகையில், முருக பக்தர்கள் மாநாட்டிற்கு விளம்பரத்தைத் தேடிக் கொடுத்த திருமாவளவன், அமைச்சர் சேகர் பாபுக்கு எனது பாராட்டுக்கள். நாங்கள் நடத்தும் மாநாட்டிற்கு கணக்குக் காட்ட தயார்; கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பணம் எந்த தொழிலதிபர்களிடமிருந்து பெற்றது, அதில் எவ்வளவு ஊழல் நடந்தது என வெளியிட அமைச்சர் சேகர்பாபு தயாரா, என்று கேள்வி எழுப்பினார். கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், ஆசியுரை வழங்கினார்.
பவன் கல்யாண் கேள்வி
தொடர்ந்து பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார். மாநாட்டில் பேசிய ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், முருகனைப்பற்றி இழிவாக யாரேனும் பேசினால் உங்கள் இதயம் நொறுங்க வேண்டாமா, பதற வேண்டாமா, துடிக்க வேண்டாமா, என்று ஆவேசமாக பேசினார். மாநாட்டின் நிறைவாக, பங்கேற்ற 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து கந்த சஷ்டி கவசம் பாடினர். எங்கும் இதுவரை நடந்திராத வகையில், ஒரே நேரத்தில் முருகனை நினைத்து லட்சக்கணக்கான பேர் கந்த சஷ்டி கவசம் பாடியது, பெரும் பரவசத்தை ஏற்படுத்தியது.
மாநாட்டின் தீர்மானங்கள்
திருப்பரங்குன்றம் மலையின் மீது தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்; கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றுவோம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக நிகழ்த்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பாராட்டு
சென்னிமலை, திருப்பரங்குன்றம், பழனி உள்ளிட்ட முருகனின் குன்றுகளை பாதுகாக்க வேண்டும்
கோவில்களை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்
ஹிந்துக்கள் ஒன்றுபட்டு இனி வரும் தேர்தல்களில் ஹிந்து ஓட்டு வங்கியை நிருபிக்க வேண்டும்
மாதந்தோறும் சஷ்டியன்று கந்த சஷ்டி கவசத்தை பாட வேண்டும்