பதிவு செய்த நாள்
30
ஜூன்
2025
12:06
சென்னை; பக்தர்களுக்கு நாள் முழுதும் பிரசாதம் வழங்கும் திட்டம், மாங்காடு காமாட்சி அம்மன் கோவில், நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவில், பழனி முருகன் கோவில், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் ஆகிய ஐந்து கோவில்களில் நேற்று துவங்கியது. மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் நேற்று, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர், பிரசாதம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தனர்.
அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், ‘‘கோவிலுக்கு வரும் பக்தர்கள் பசியோடு செல்லக்கூடாது என்பதற்காக, நாள் முழுதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை, 13 கோவில்களுக்கு விரிவுப்படுத்தி உள்ளோம்,’’ என்றார். முதல் கால அபிஷேகம், பூஜை முடிந்தவுடன், காலை, 9:30 – 12:00 மணி வரையும், மூன்றாவது கால அபிஷேகம், பூஜை முடிந்ததும், மாலை, 6:30 – 8:30 மணி வரை பிரசாதம் வழங்கப்படும்.
என்ன பிரசாதம்?; * திங்கள், புதன், சனி ஆகிய நாட்களில் காலையில், வெண் பொங்கல் மற்றும் மாலையில் சுண்டல் வழங்கப்படும்
* செவ்வாய், வியாழன், ஞாயிறுகளில் காலையில் புளியோதரை, மாலையில் கேசரி வழங்கப்படும்
* வெள்ளிக்கிழமை காலையில் எலுமிச்சை சாதம், மாலையில் சக்கரை பொங்கல் வழங்கப்பட உள்ளது.