பதிவு செய்த நாள்
30
ஜூன்
2025
11:06
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் கும்பாபிஷேகத்திற்காக ஜூலை 4ல் பூர்வாங்க பூஜை நடக்கிறது. கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக ராஜகோபுரம், வல்லவ கணபதி விமானம், கோவர்த்தனாம்பிகை விமானம் உள்பட பல்வேறு பணிகள் நிறைவடைந்துள்ளது. தற்போது வள்ளி தேவசேனா திருமண மண்டபத்தில் முன்பு யாகசாலை அமைக்கும் பணி நடக்கிறது. ஜூலை 4ல் பூர்வாங்க பூஜை: காலை 6:30 மணிக்கு மங்களை இசையுடன் துவங்கி யஜமான சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புனித நீர் தெளித்தல், அனுமதி பெறுதல், இறை அனுமதி பெறுதல், தனபூஜை, திருமுறை விண்ணப்பம் முடிந்து தீபாராதனை நடக்கும். ஜூலை 5முதல் ஜூலை 9 வரை பூஜை நடக்கிறது. யாகசாலை பூஜை துவக்கம்: ஜூலை 10 மாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்குகிறது. ஜூலை 11 காலையில் இரண்டாம் கால யாக பூஜை, மாலையில் மூன்றாம் கால யாக பூஜை, ஜூலை 12 காலை 4ம் காலை யாக பூஜை, அன்று மாலை 5ம் கால யாக சாலை பூஜை, ஜூலை 13 காலையில் 6ம் கால யாக பூஜையும் மாலையில் 7ம் கால யாக பூஜையும் நடக்கிறது. அன்று இரவு 7:00 மணிக்கு 16 கால் மண்டபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரரை குன்றத்து சுவாமிகள் வரவேற்கும் நிகழ்ச்சி நடக்கும். ஜூலை 14 அதிகாலை 3:45 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம் முடிந்து 8ம் கால யாக பூஜை பூர்த்தி செய்யப்பட்டு தீபாராதனை நடக்கும். காலை 5:00 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்கள் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அதிகாலை 5:30 முதல் காலை 6:10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறும். அன்று இரவு மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரரை வழி அனுப்பும் நிகழ்ச்சி முடிந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சத்யகிரீஸ்வரர், பிரியாவிடை,: கோவர்த்தனாம்பிகை அம்பாள் விதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பர். ஜூலை 15 முதல் மண்டல பூஜை துவங்குகிறது.