பதிவு செய்த நாள்
02
ஜூலை
2025
02:07
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.
ஆதியும் அந்தமும் அருட்பெரும் ஜோதியான சிவபெருமானின் அவதாரத்தில் இன்றியமையாதது நடராஜர் திருக்கோலம். சிவபெருமானுக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் ஆடலரசன் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அதில் ஒன்று தான் ஆனி திருமஞ்சனம். நேற்று மாலை திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், நடராஜர் சபையில் வேத மந்திரங்கள் முழங்க சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இன்று காலை 6:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், தீபாராதனை, விழா மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் எழுந்தருளி சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி வீதி உலா, கோவில் வளாகத்தில் திருவூடல் வைபவம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு நடராஜ பெருமானை வழிபட்டனர்.