பதிவு செய்த நாள்
19
டிச
2012
10:12
கொச்சி: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, கரிமலை - பம்பை இடையே, இரவு நேரத்தில் பக்தர்கள் நடந்து செல்ல, கேரள ஐகோர்ட் தடை விதித்துள்ளது.சபரிமலை ஐயப்பன் கோவிலில், நடந்து வரும் மண்டல உற்சவத்தில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக, சபரிமலை செல்லும் பக்தர்களில், ஒரு பிரிவினர், எருமேலி - அழுதா - கரிமலை - பெரியானை வட்டம் மற்றும் பம்பை வழியாக நடந்து செல்கின்றனர். சமீபத்தில், இந்தப் பாதையில் நடந்து சென்ற பக்தர்களில், பிளஸ்1 மாணவனை, காட்டு யானை மிதித்து கொன்றது.இதுதொடர்பாக வெளியான செய்திகளையே, மனுவாக விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட, கேரள ஐகோர்ட் நீதிபதிகள் ராதா கிருஷ்ணன், ராமகிருஷ்ண பிள்ளை அடங்கிய,
பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: கரிமலையில் இருந்து பெரியானை வட்டம், சிறியானை வட்டம் வழியாக பம்பைக்கு செல்லும் பாரம்பரிய பாதை மிக குறுகலானது. இப்பாதையில் அதிகளவில் பக்தர்கள் செல்ல முடியாது. மேலும், இருட்டிய பின், போதிய வெளிச்சம் இல்லாமல், பக்தர்கள் இப்பாதையில் நடந்து செல்வது, பக்தர்களின் பாதுகாப்புக்கு நல்லதல்ல.எனவே, எருமேலி - அழுதா - கரிமலை - பெரியானை வட்டம்-சிறியானை வட்டம் வழியாக, பம்பைக்கு இரவு நேரங்களில் பக்தர்களை அனுமதிப்பதில்லை என்பதை, மாநில போலீசாரும், வனத்துறையினரும் உறுதி செய்ய வேண்டும். தினமும் மாலை, 5:00 மணிக்கு முன், பம்பை சென்றடையும் நிலையில் உள்ள பக்தர்களை மட்டுமே, அப்பாதையில் அனுமதிக்கவேண்டும். மேலும், இப்பாதையில், பக்தர்கள் செல்லும் போது, 12 பேருக்கு குறையாமல் கூட்டமாகச் செல்ல வேண்டும். அதற்கும் குறைவாக உள்ள பக்தர்களை, தனியே செல்ல அனுமதிக்க கூடாது. இந்த பாரம் பரிய பாதையில், இரவு நேரத்தில் பக்தர்கள் நடந்து செல்ல தடை விதிக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.