பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2025 12:07
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசித்தி பெற்ற பெரியகுளம் தென்கரை கவுமாரியம்மன் கோயில் ஆண்டு தோறும் ஆனித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். திருவிழாவிற்காக ஜூன் 16ல் முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. ஜூலை 1ல் கம்பம் நடப்பட்டது.நேற்று சிங்கம் முகம் வரைந்த கொடி ஏற்றப்பட்டது.
கோயிலில் கும்பாபிஷேகம் திருப்பணிகள் நடந்து வருவதால், கொடி மரத்தில் முழுமையாக செல்லாமல் குறிப்பிட்ட தூரத்தில் கொடி நிலை நிறுத்தப்பட்டது. முன்னதாக கொடிமரத்திற்கு பால், தயிர், பன்னீர், தேன் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் பூஜாரிகள் அபிஷேகம் நடத்தினர். நேற்று முதல் ஜூலை 16 வரை பத்து நாட்கள் திருவிழா நடக்கும். தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவார். கொடியேற்றம் நிகழ்ச்சியில் வர்த்தக சங்க தலைவர் சிதம்பர சூரியவேலு, முன்னாள் தாசில்தார் பாலசுந்தரம், கண்ணன், சிவக்குமார் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தார். ஏற்பாடுகளை மண்டகபடிதாரர்கள் செய்திருந்தனர்.