பதிவு செய்த நாள்
10
ஜூலை
2025
10:07
புட்டபர்த்தி; குரு பூர்ணிமாவை ஒட்டி, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் இன்று காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்காக, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் திரண்டு வழிபட்டனர்.
காலத்தால் அழியாத பாரம்பரியத்தை போற்றும் பக்தி, ஆன்மீக சிந்தனைகள் மற்றும் கூட்டு வழிபாட்டுடன் தெய்வீக ஆசிரியரும், நித்திய வழிகாட்டியுமான பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. நிகழ்ச்சியை ஒட்டி, சாய் பிரசாந்தி நிலையத்தில் விழாக்கோலம் பூண்டுள்ளது. குல்வந்த் அரங்கம் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதிலும் இருந்து, சத்யசாய் பாபாவின் ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். விழாவானது காலை 8:00க்கு வேத பாரயணத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து காலை 8:20க்கு பிரசாந்தி பஜன் குழுமத்தின் குரு வந்தனம் நடைபெற்றது. காலை 9:05 மணிக்கு ஸ்ரீ சத்யசாய் மத்திய அறக்கட்டளை டிரஸ்டி ஸ்ரீ எஸ்.எஸ்.நாகானந்த் வரவேற்புரையில், பகவானின் போதனைகளையும், பகவத் கீதை உட்பட வேதங்களில் உள்ளவற்றையும் மேற்கோள் காட்டி, சத்குருவின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார். காலை 9:15 மணிக்கு ஸ்ரீ சத்யசாய் சேவா அமைப்பின் அகில இந்திய தலைவர் நிமிஷ் பாண்டியா உரையாற்றினார். விழாவில் தலைமை விருந்தினராக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்று சிறப்புரையாற்றினார். தொடர்ந்து அவர் பக்தர்களுக்கு தெய்வீக பிரசாதங்களையும் வழங்கினார். உள்ளூர் விவசாயிகளுக்கு பண்ணை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார். ஆன்லைனில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் மந்திரங்களை உச்சரித்ததற்காக ஸ்ரீ சத்ய சாய் மீடியா சென்டருக்கு கின்னஸ் உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது - ஜூன் 15, 2024 அன்று 11,000 பக்தர்கள் சாய் காயத்ரி மந்திரத்தை உச்சரித்தனர். தொடர்ந்து சொற்பொழிவு, பஜனை நிகழ்ச்சிகளுக்கு பின், பகவானின் பிருந்தாவனத்துக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் வேதம், ஆன்மிக இசை நிகழ்ச்சி, பஜனை, தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.