பதிவு செய்த நாள்
20
டிச
2012
11:12
சென்னை: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், நூறாண்டுகளுக்கு பின் கலை அம்சங்களுடன், 47 அடி உயர மரத்தாலான புதிய தேர் வடிவமைக்கும் பணி துவங்கியது. வடசென்னையில் பிரசித்தி பெற்ற கோவில்களில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலும் ஒன்று. இக்கோவிலில் கடைசியாக, 1998ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது, திருப்பணி நடந்து வருகிறது. இந்நிலையில், பக்தர்களின் நீண்டகால கனவு நிறைவேறும் வகையில், திருவொற்றியூர் மாடவீதிகளில் பவனி வர, 46 லட்சம் ரூபாய் செலவில் கலை அம்சங்களுடன், 47 அடி உயரமும், 50 டன் எடையும் கொண்ட புதிய தேர் வடிவமைக்கும் பணி வேகமாக நடக்கிறது. தேருக்கு திருச்சி "பெல் நிறுவனம் தயாரிக்கும் ஐந்தரை அடி விட்டம் கொண்ட நான்கு இரும்பு சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன. இரண்டு குதிரைகள், 15 அடுக்குகளுடன் சிம்மாசனமும், 52 அலங்கார தூண்களும், 350 பொம்மை சிற்பங்கள், ஐந்து நிலைகளுடன் விமானம், கலசம் மற்றும் குடை ஆகியவற்றுடன் தேர் அமைகிறது.ஸ்தபதி கல்யாணசுந்தரம் புதிய தேரை வடிவமைத்து வருகிறார்.