விழுப்புரம்; திண்டிவனம் அருகே, 1300 ஆண்டுகள் பழமை யான ஐயனார் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. திண்டிவனம் அருகே அன்னம்புத்துார் கிராமத்தில், விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் குழுவினர் கள ஆய்வில் ஈடுபட்டபோது, பல்லவர் கால அய்யனார் சிற்பத்தை கண்டறிந்தனர்.
இதுகுறித்து செங்குட்டுவன் கூறியதாவது: அன்னம்புத்துார் ஏரிக்குள் சன்னியாசிமேடு பகுதி மீது, கருங்கல்லில் தனி சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. அதனை மக்கள் சன்னியாசி சாமி என்று வணங்கி வருகின்றனர். இந்த சிற்பத்துக்கு உரியவர் ஐயனார். பிரம்மாண்டமான தலை அலங்காரத்துடனும், இடைக்கச்சை அணிந்தும் காணப்படும் அவரது இடுப்பில் குறுவாள் இருக்கிறது. காதுகள், மார்பு, கைகள் மற்றும் கால்களில் அணிகலன்கள் காணப்படுகின்றன. வலது கையை முழங்கால் மீது வைத்தும், இடது கையை தொடை மீது வைத்தும், வலது காலை குத்திட்டும், இடது காலை மடக்கியும் மகாராஜ லீலாசனத்தில் அவர் அமர்ந்துள்ளார். வழக்கமான ஐயனார் சிற்பங்களில் காணப்படும், துணைவியர்களான பூரணி, பொற்கலை மற்றும் அவரது வாகனம் உள்ளிட்ட எதுவும் இந்த சிற்பத்தில் காணப்படவில்லை. இது காலத்தால் முற்பட்ட சிற்பமாக இருக்கலாம். இதன் காலம் கி.பி.7ம் நூற்றாண்டு. 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். விழுப்புரம் மாவட்டத்தில் கண்டறியப்பட்ட ஐயனார் சிற்பங்களில் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இக்கிராமத்தில், பல்லவர் காலத்தில் சிவாலயம் இருந்து மறைந்துள்ளது. இதற்கு ஆதாரமாக பல்லவர் கால ஆவுடையார் ஒன்று இங்கு காணப்படுகிறது. மேலும், இதே காலத்தை சேர்ந்த கொற்றவை, விநாயகர் சிற்பங்கள் புதுப்பித்து கட்டப்பட்டுள்ள சிவாலயத்தில் வழிபாட்டில் இருக்கின்றன. சிவாலய வளாகத்தில் உள்ள ராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் மூலம் இவ்வூர் பிரம்மதேயமாக இருந்ததையும், அன்னப்புத்துார் எனும் பெயர் அப்போதே வழங்கப்பட்டதையும் தெரிந்து கொள்ளலாம். பல்லவர் காலத்திலும், அதனை தொடர்ந்து சோழர் காலத்திலும், அன்னம்புத்துார் கிராமம் சிறந்து விளங்கியதை இங்கிருக்கும் வரலாற்று தடயங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, அந்த கிராமத்தை சேர்ந்த மாதவன், தெய்வநாயகம், இமயவரம்பன், ஞானசேகர், தட்சிணாமூர்த்தி, காயத்ரி, சுந்தரகாந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.